×

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வேதனை சனி, ஞாயிறு கூட விடுமுறை இல்லை

புதுடெல்லி: மேற்கு வங்க அரசின் அனுமதி இல்லாமல், சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்மாநில அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும் 20ம் தேதி முதல் கோடை விடுமுறை என்பதால் இரு தரப்புகளும் வாதங்களை ஒரே நாளில் முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதற்கு மனுதாரர் தரப்பிலும் ஒப்பதல் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில்,‘‘உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்துக்கு நீண்ட விடுமுறை அளிக்கப்படுகிறது என்று ஒரு தரப்பினர் விமர்சிக்கின்றனர். ஆனால், நாங்கள் எப்படி செயல்படுகிறோம் என்பது அவர்களுக்கு தெரியாது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட எங்களுக்கு விடுமுறை இல்லை. அந்த நாட்களிலும் கருத்தரங்கு உட்பட மற்ற பணிகளை கவனிக்க வேண்டும்.

விமர்சனம் செய்வோர் இதை புரிந்து கொள்வதில்லை. விடுமுறை நாட்களில், தாங்கள் விசாரிக்கும் வழக்குகளில் நீதிபதிகள் தீர்ப்பு எழுதுவர். நடைமுறை தெரியாதவர்கள் இதை விமர்சிக்கின்றனர்’’ என்று வருத்தத்துடன் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,‘‘உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினசரி 50 முதல் 60 வழக்குகளை கையாள்கின்றனர். விடுமுறை எடுக்க அவர்கள் தகுதியானவர்கள். நீதிபதிகள் எப்படி செயல்படுகின்றனர் என்பது விமர்சிப்போருக்கு அது தெரியாது’’ என்றார்.

The post உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வேதனை சனி, ஞாயிறு கூட விடுமுறை இல்லை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,West Bengal government ,CBI ,PR ,Kawai ,Sandeep Mehta ,
× RELATED வாக்காளர் ரகசியம் மீறப்படுவதாக...